லண்டன்: பிரிட்டனில் ஓமிக்ரான் வகைக் கிருமியின் பரவலால் இவ்வாண்டு ஜனவரி முதல் வாரத்தில் வேலைக்குச் செல்லாதவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து உள்ளது.
அந்நாட்டில் மொத்தம் 3.1 மில்லியன் பேர் கடந்த வாரம் வேலைக்குச் செல்லாமல் இருந்திருக்கக்கூடும் என்று குட்ஷேப் எனும் பகுப்பாய்வு நிறுவனம் கூறியது.
பிரிட்டிஷ் ஊழியர்களிடையே வேலை தொடர்பான நோய்களையும் அவர்களின் நலனையும் கண்காணித்து வரும் குட்ஷேப் நிறுவனம், புளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்காக இந்த பகுப்பாய்வை நடத்தியது.
சுமார் 3.1 மில்லியன் பேர் வேலைக்குச் செல்லாததால் பிரிட்டிஷ் பொருளியல் சுமார் 1.3 பில்லியன் பவுண்டை (2.4 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) இழந்ததாக அது மதிப்பிட்டது.
குறிப்பாக ஜனவரி 3 முதல் 9 வரை சுமார் 1.6 மில்லியன் பேர் வேலைக்குச் செல்லவில்லை என்று நிறுவனம் கூறியது. அது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 18 விழுக்காடு அதிகம்.
பிரிட்டனில் ஜனவரி 4ஆம் தேதி ஆக அதிகமாக 218,724 பேருக்கு புதிதாக கொவிட்-19 தொற்று பதிவானது.
கொவிட்-19 அதிகரிப்பால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் அங்கு ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையும் மருத்துவமனை கட்டமைப்பின் மீது பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதையும் இது காட்டுவதாக குட்ஷேப் கூறியது.