சிட்னி: கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் ஆஸ்திரேலியாவில் தற்போது தேசிய சுகாதார நெருக்கடி நிலவுகிறது.
இரண்டு ஆண்டுகளாக கிருமி பரவலைத் திறம்பட கையாண்டு வந்த ஆஸ்திரேலியா, முதன்முறையாகத் தேசிய சுகாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.
சென்ற ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, ஆஸ்திரேலியாவில் ஒட்டுமொத்தமாக 213,000 பேரைக் கிருமி தொற்றியிருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 1.2 மில்லியனைக் கடந்துவிட்டது.
மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பத் தொடங்கியுள்ளது, தடுப்பூசி, பரிசோதனைக் கருவிகள் கையிருப்பு இல்லாமல் போராடும் மருந்தகங்கள், ஊழியர்கள் தொற்றுக்கு ஆளானதால் கடைகளில் காலியாக இருக்கும் அலமாரிகள் எனப் பலவிதங்களிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இம்மாத பிற்பகுதியில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவுள்ளதால், அதற்கு முன்னதாக பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்களால் மேலும் ஒரு நெருக்கடி எழுந்துள்ளது.
ஐந்து வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு இந்த வாரம் முதல் தடுப்பூசி போடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக பலரும் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக அவை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே பேசிய துணைத் தலைமை மருத்துவ அதிகாரி மிக்கேல் கிட், 'பதற்றமடைய வேண்டாம்' என்றும் இந்த மாத இறுதிக்குள் அனைத்துப் பிள்ளைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்குத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும் சொன்னார்.
அதிகரித்து வரும் பரிசோதனை தேவையை அரசாங்கத்தால் சமாளிக்க முடியாததே மிகப்பெரிய தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. சில இடங்களில் பரிசோதனைக்காக மக்கள் 6 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

