நோம் பென்: கம்போடியாவில் 100 கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் அபார மோப்ப சக்தி பெற்ற மகாவா எலி உயிரிழந்தது.
கம்போடியாவில் நிலவெடிகளைக் கண்டறிவதில் திறம்பட செயல்பட்டு வந்த 8 வயதான மகாவா சென்ற ஆண்டு ஓய்வு பெற்றது.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகாவா உயிரிழந்தது.
மகாவா எலி ஆஃப்ரிக்காவின் டான்சானியா நாட்டில் பிறந்து, வளர்ந்தது. அங்கிருந்து கம்போடியாவுக்கு கொண்டுவரப்பட்டு கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் பணிக்காகவே பிரத்தியேகமாக பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டது.
கம்போடியாவில் 1998ல் முடிவடைந்த முப்பதாண்டு கால உள்நாட்டுப் போரின்போது மில்லியன் கணக்கான நிலவெடிகள் புதைக்கப்பட்டன. இவற்றில் சிக்கி கிட்டத்தட்ட 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததால் அவற்றை அகற்றுவதற்கு முடிவு செய்த அந்நாட்டு அரசு, மகாவா எலியை அப்பணியில் ஈடுபடுத்தியது.
இதன் மிகச் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் விதமாக பிரிட்டனின் விலங்குகள் நல அமைப்பு, 2020ஆம் ஆண்டில் மகாவாவுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தியது.
அந்த அமைப்பின் 77 ஆண்டுக் கால வரலாற்றில் முதன்முறையாக எலி ஒன்று தங்கப்பதக்கம் பெற்றது.