சிட்னி: கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகள் தனிமைப்படுத்தல் விதிகளைப் பின்பற்றி வருகின்றன.
ஆனால், தனிமைப்படுத்தல் உத்தரவால் மருத்துவத் துறை மட்டுமல்லாமல், வேறு பல துறைகளிலும் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனைச் சமாளிக்கும் விதமாக, ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் தனிமைப்படுத்தல் உத்தரவில் தளர்வுகளை அறிவித்துள்ளன.
நாளுக்கு நாள் கிருமித் தொற்றி யவர்கள் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே இருக்கும் ஆஸ்திரேலியாவில், ஊழியர் பற்றாக்குறை காரணமாக பொருள் விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடைகளில் அலமாரிகள் காலியாக இருக்கின்றன.
எனவே, கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கான தனிமைப்படுத்தல் உத்தரவை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லையென்றால், அவசர சேவை பிரிவு, கல்வி, போக்குவரத்து ஊழியர்கள் உடனே வேலைக்குத் திரும்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஜப்பானில் மருத்துவ ஊழியர்கள் பலர் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அது மருத்துவ அமைப்பின் மீது நெருக்கடியை ஏற்படுத்தியதால், தற்போது அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அன்றாட கிருமித்தொற்று பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் போதும் என்று அதன் சுகாதார அமைச்சர் சொன்னார்.

