துபாய் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்ட இரு எமிரேட்ஸ் விமானங்களுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இகே-524 விமானம், இரவு 9.45 மணிக்கு ஹைதராபாத்துக்குப் புறப்படவிருந்தது. கிட்டத்தட்ட அதே நேரத்தில், இகே-568 விமானம் பெங்களூருக்குப் புறப்படவிருந்தது.
அவ்விரு விமானங்களும் ஒரே ஓடுபாதையில் சென்று பறக்கவிருந்தன. எமிரேட்ஸ் விமானப் புறப்பாட்டு அட்டவணைப்படி, அவ்விரு விமானங்களின் புறப்பாட்டு நேரத்திற்கு இடையே ஐந்து நிமிட இடைவெளி இருந்தது.
“ஹைதராபாத்துக்குப் புறப்படவிருந்த இகே-524 விமானம், 30ஆர் ஓடுபாதையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது அதே திசையில் மற்றொரு விமானம் வேகமாக வந்துகொண்டிருந்ததை இகே-524 விமானிகள் கவனித்தனர். விமானம் புறப்படுவதை உடனடியாக ரத்து செய்யுமாறு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் உத்தரவிட்டது. அதையடுத்து, மெதுமெதுவாக வேகத்தைக் குறைத்துக்கொண்ட இகே-524 விமானம், என்4 எனும் வேறொரு ஓடுபாதைக்குப் பாதுகாப்பாக மாறியது.
“பெங்களூருக்குச் செல்லவிருந்த இகே-568 விமானம், அதே 30ஆர் ஓடுபாதையில் சென்று புறப்பட்டுவிட்டது,” என்று இந்தச் சம்பவம் பற்றி தகவலறிந்த ஒருவர், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஹைதராபாத்துக்குச் செல்லவிருந்த இகே-524 விமானம், மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியது. ஒரு சில நிமிடங்கள் கழித்து, அது மீண்டும் புறப்பட்டது.
இந்நிலையில், ஐக்கிய அரபு சிற்றரசுகளின் விமானப் போக்குவரத்து விசாரணை அமைப்பு, இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியது. பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு பற்றி எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்திய எமிரேட்ஸ் நிறுவனம், இதுகுறித்து ஏஎன்ஐ நிறுவனத்துடன் பேசியது.
“ஜனவரி 9ஆம் தேதி, துபாயில் இருந்து புறப்படுவதை ரத்து செய்யுமாறு இகே-524 விமானத்துக்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவுக்கு இணங்க, அதன் விமானிகள் புறப்பாட்டை வெற்றிகரமாக ரத்து செய்தனர். விமானத்திற்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை,” என்று எமிரேட்ஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட அந்த விமானச் சிப்பந்திகளுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதே எங்களது தலையாய பணி. தனிப்பட்ட முறையில் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்,” என்று அப்பேச்சாளர் மேலும் சொன்னார்.