சோல்: வடகொரியா ரயிலிலிருந்து ஏவுகணையைப் பாய்ச்சி சோதனை செய்ததாக அந்நாட்டு அரசாங்கத்தின் கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகக் கடைசி நிலவரப்படி வடகொரியா இம்மாதம் மூன்று ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.
வடகொரியாவின் நடவடிக்கைகள், அந்நாட்டிற்கு எதிராகக் கூடுதல் தடை உத்தரவுகளை விதிக்க அமெரிக்காவைத் தூண்டின. குறைந்த தூரம் செல்லும் இரண்டு 'எஸ்பிஆர்எம்' ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டன.
இந்த ஏவுகணைகள் சுமார் 430 கிலோமீட்டர் தூரம் சென்றன. இவை எட்டிய உயரம், 36 கிலோமீட்டர் என்று தென்கொரியாவின் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதிகள் தெரிவித்தனர். ஏவுகணைகள் எவ்வளவு தூரம் சென்றன, எட்டிய உயரம் குறித்து கேசிஎன்ஏ தகவல் ஏதும் வெளியிடவில்லை. ரயிலிலிருந்து பாய்ச்சப்படும் ஏவுகணையின் ஆற்றலைச் சோதித்துப் பார்க்க வட பியோங்கான் மாநிலத்தில் சோதனை நடத்தப்பட்டதாக மட்டும் அது கூறியது.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் வடகொரியா முதன்முறையாக ரயிலிலிருந்து பாய்ச்சப்படும் ஏவுகணைகளைச் சோதித்தது. தனக்கு மிரட்டல் விடுக்கக்கூடியோருக்குப் பதிலடி கொடுக்க இத்தகைய ஏவுகணையை உருவாக்கியதாக அது சொன்னது.
புத்தாண்டு பிறந்ததிலிருந்து வடகொரியா என்றும் இல்லாத வகையில் மிக வேகமாக மூன்று ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. ரயில் ஏவுகணையைச் சோதிப்பதற்கு முன் இவ்வாண்டு அதிவேகமாக வளைந்து நெளிந்து போகக்கூடிய 2 'ஹைப்பர்சானிக்' ஏவுகணைகளை வடகொரியா சோதனையிட்டது.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இந்த ஏவுகணைச் சோதனையை நேரில் சென்று பார்வையிடவில்லை.
ரயில் ஏவுகணைகளை உருவாக்க செலவு குறைவு. பாய்ச்சுவதற்கு முன் அவற்றை அடையாளம் காண்பதும் கடினம்.

