பாரிஸ்: கிருமிப் பரவல் சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல நாடுகள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், உலகின் முதல் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு இருமடங்கு உயர்ந்துள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.
வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு இயங்கும் ஆக்ஸ்ஃபாம் எனும் அனைத்துலக அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில், உலகின் முதல் 10 செல்வந்தர்களின் சொத்து மதிப்பு 700 பில்லியன் அமெரிக்க டாலரில் (945 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) இருந்து 1.5 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதாவது நாளொன்றுக்கு அவர்கள் சராசரியாக 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 14 ஆண்டுகளைக்காட்டிலும் கிருமிப் பரவல் காலத்தில் அவர்களின் சொத்து மதிப்பு அதிகமாக உயர்ந்துள்ளதாக அமைப்பு சொன்னது.
இதற்கிடையே, கிருமித்தொற்று 160 மில்லியன் மக்களை வறுமையில் தள்ளியுள்ளதாகவும் அது சொன்னது.
அதே நேரத்தில் கொரோனா காலத்தில் போதுமான சுகாதார வசதிகள் இல்லாமலும் பசி, பருவநிலை மாற்றம் காரணமாகவும் ஒவ்வொரு நாளும் 21 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் கூறியுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் உள்ள முதல் 10 இடங்களில் உள்ள பணக்காரர்களின் சொத்து, அந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் பள்ளிக் கல்வி, உயர்கல்விச் செலவுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்குப் போதுமானது என்றும் ஆக்ஸ்ஃபாம் இந்தியா தெரிவித்துள்ளது.
கொள்ளைநோய் காலத்தில் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை 39 விழுக்காடு அதிகரித்து, 142 பணக்காரர்கள் உள்ளதாகவும் அறிக்கை கூறியது. அவர்களில் பலரின் சொத்து மதிப்பு இருமடங்காகியுள்ளதாகவும் அது சொன்னது.

