பத்துமலை: தைப்பூசத் திருநாளில் பத்துமலை கோவிலுக்கு வெளியே பெண் ஒருவர் காரிலேயே குழந்தை பெற்றெடுத்தார்.
பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த போது, மலேசியாவில் உள்ள பத்துமலை கோயிலுக்கு அருகே அவரது கணவர் காரை நிறுத்தினார்.
பெண்ணின் அழுகை சத்தம் கேட்டு தைப்பூச நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காக கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த பக்தர்கள் உதவிக்குச் சென்றனர். அப்போது அப்பெண் பிரசவிக்க இருப்பதை உணர்ந்து அவர்கள் உடனடியாக செயல்பட்டனர்.
துணை மருத்துவக் குழுவினர் வருவதற்குள் அவர், பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்.
பிறகு மருத்துவக் குழுவினர், அத்தம்பதியை குழந்தையுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தைப்பூசத் திருநாளில் நிகழ்ந்த இச்சம்பவம், "படத்தில் பார்ப்பதைப் போன்று இருந்தது," என்றார் அங்கிருந்த ஒருவர்.

