சிட்னி: ஆஸ்திரேலியாவில் நிலவும் கடுமையான ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்க அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளார் அதன் பிரதமர் ஸ்காட் மோரிசன்.
தங்கள் நாட்டில் வேலை செய்யத் தயாராக உள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கும் வேலை விடுப்பில் செல்லும் வெளிநாட்டினருக்கும் ஆஸ்திரேலிய அரசு விசா கட்டணத்தில் தள்ளுபடி வழங்கும் என்று மோரிசன் அறிவித்துள்ளார்.
இத்திட்டம் ஆஸ்திரேலியாவின் ஊழியர் தேவையை, குறிப்பாக விருந்தோம்பல், விவசாயத் துறைகளில் உள்ள பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் என்றும் அவர் சொன்னார்.
வேலை செய்ய விரும்பும் மாணவர்களுக்கும் வேலை விடுப்பு விசாவில் வரும் வெளிநாட்டினருக்கும் 630 ஆஸ்திரேலிய டாலர் (612 சிங்கப்பூர் வெள்ளி) விசா கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று மோரிசன் சொன்னார்.
இத்திட்டம் மாணவர்களுக்கு அடுத்த எட்டு வாரங்களுக்கும் வேலை விடுப்பு விசா வைத்துள்ள வெளிநாட்டினருக்கு 12 வாரங்களுக்கும் பொருந்தும் என்றார் அவர்.
அதிக கிருமித்தொற்று சம்பவங்கள் காரணமாக ஆஸ்திரேலிய மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், நிறுவனங்களும் சில்லறை வர்த்தகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று மதிய நிலவரப்படி ஒரே நாளில் 80,000க்கும் அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
அங்கு செவ்வாய்க்கிழமையன்று ஆக அதிகமாக 77 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகினர்.
இனிவரும் நாட்களில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றார் தலைமை சுகாதார அதிகாரி பால் கெல்லி.
தொற்றுக்கு ஆளானவர்கள், தொற்றுக்கு ஆளானவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலிய வர்த்தகங்கள் தேவையைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.
பொருள் விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் சில கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்குவதற்கு வரம்புகளை நிர்ணயித்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் 10 முதல் 50 விழுக்காட்டு ஊழியர்கள் வேலைக்கு வருவதில்லை என்று உணவு, தளவாடத் துறையைச் சார்ந்த நிறுவனங்கள் கூறின.
ஊழியர் பற்றாக்குறையை எதிர்த்து, சிட்னியின் மிகப்பெரிய மருத்துவமனையின் தாதியர்கள் பேரணி நடத்தினர்.

