கோலாலம்பூர்: கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தில் சிலாங்கூர் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதற்கு அந்த மாநிலம் ஆயத்த நிலையில் இல்லாததே காரணம் என்று மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் குற்றம் சாட்டியுள்ளார்.
சிலாங்கூர் மெதுவாகச் செயல்பட்டதால் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.
கடந்த மாதம் மலேசியாவில் வரலாறு காணாத மழை பெய்ததால் நாட்டின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. நேற்று சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய பிரதமர் இஸ்மாயில் பேரிடர் நிர்வாகத்தைச் சுற்றி உள்ள பிரச்சினைகளைப் பற்றி விளக்கினார்.
சிலாங்கூரின் மாநில, மாவட்ட அளவிலான பேரிடர் நிர்வாகத்தில் பலவீனங்கள் இருந்தன. இதனால் நான் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று பிரதமர் தமது தொடக்கவுைரயில் தெரிவித்தார்.
திரு இஸ்மாயில் தலைமையிலான மத்திய அரசாங்கமும் முதல்வர் அமிருடின் ஷாரி தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கமும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதிலும் உதவி செய்வதிலும் மெதுவாகச் செயல்பட்டதாக இரு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
"சிலாங்கூரின் வெள்ள நிர்வாகம் 2வது, 3வது நாளிலும் மேம்படவில்லை. இது அதிருப்திக்கு வழி வகுத்தது." என்று திரு இஸ்மாயில் குறிப்பிட்டார்.
இதற்கிடையே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இரண்டு பில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் செலவாகும் என்று நிதி அமைச்சர் சஃப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
"பேரிடர் நிவாரணத்துக்கு 1.4 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள உதவியை பிரதமர் அறிவித்திருந்தார். ஆனால் பல்வேறு உதவிகளுக்கான செலவுகள், சேதமடைந்த வீடுகள் மற்றும் பொது வசதிகளை சீர் படுத்துவதற்கான தேவை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தொகை 2 பில்லியன் ரிங்கிட்டை தாண்டியுள்ளது," என்று நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் தெரிவித்தார்.