காணாமல்போன $51,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த துபாய் காவல்துறை

காணாமல்போன $51,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த துபாய் காவல்துறை

1 mins read
2efae515-1df4-425f-959f-79c4b9f6a520
உரியவரிடம் பணத்தை ஒப்படைக்கும் துபாய் காவல்துறை அதிகாரி. படம்: கலீஜ்டைம்ஸ் -

துபாய் அனைத்துலக விமான நிலையத்தில் உரியவரிடம் 33,600 யூரோ (S$51,000) பணத்தை காவல்துறையினர் அண்மையில் ஒப்படைத்தனர்.

காணாமல்போன பணம் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டபோது, சிக்ஃபிரிட் டெல்பாக் எனும் அந்த ஜெர்மானிய நாட்டவர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். பணம் எப்போது, எங்கே காணாமல்போனது என்பது பற்றி அவருக்குத் தெரியாது.

விடுமுறையைக் கழிப்பதற்காக, ஜெர்மனியில் இருந்து துபாய் விமான நிலையம் வழியாக தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டார் டெல்பாக்.

தாய்லாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வந்தவுடன்தான், பணம் இருந்த பை காணாமல்போய்விட்டதை அறிந்து திரு டெல்பாக் அதிர்ச்சியடைந்தார். அதன் மதிப்பு ஏறத்தாழ 33,600 யூரோ.

தாய்லாந்தில் இருந்து ஜெர்மனிக்குத் திரும்ப துபாய் விமான நிலையத்திற்கு வந்தபோது, அங்கு அதிகாரி ஒருவர் டெல்பாக்கை அணுகினார். அவருடைய அடையாளத்தை உறுதிசெய்து பணத்தை ஒப்படைத்தார் அந்த அதிகாரி.

பணப்பையைத் தம்மிடம் ஒப்படைத்ததற்காக காவல்துறைக்கும் துபாய் விமான நிலைய ஊழியர்களுக்கும் டெல்பாக் நன்றி கூறினார்.

காணாமல்போன பணம் தம் கைக்குத் திரும்ப வந்துவிடும் என்று அவர் நினைத்துப் பார்க்கவே இல்லை.

பணத்துக்குச் சொந்தக்காரர் அடையாளம் காணப்பட்டவுடன், அவரது பயண விவரத்தை அறிய எமிரேட்ஸ் விமான நிறுவனத்தை ஊழியர்கள் தொடர்புகொண்டதாக 'லாஸ்ட் & ஃபவுண்ட்' பிரிவுத் தலைவர் மேஜர் முகம்மது கலிஃபா அல் கம்டா கூறினார்.

"துபாய் விமான நிலையத்தில் அந்தப் பயணியின் வருகைக்காக நாங்கள் காத்திருந்தோம். உரியவரிடம் பணத்தை ஒப்படைத்துவிட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்," என்றார் அவர்.