பெட்டாலிங் ஜெயா: மலேசியாவிற்குச் செல்லும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், இனி ஐந்து நாள்கள் மட்டும் தனிமைப்படுத்திக்கொண்டால் போதும் என்று அதன் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் கூறியுள்ளார்.
இது வரும் திங்கட்கிழமை (ஜனவரி 24ஆம் தேதி) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அவர் சொன்னார். இந்த புதிய விதிமுறைகள் மலேசியர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும்.
அத்துடன் அவர்கள் பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும் மலேசியா சென்றடைந்தவுடனும், அதன் பிறகு நான்காவது நாளும் கிருமித்தொற்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டோர் ஏழு நாட்களும், பாதி தடுப்பூசி அல்லது தடுப்பூசியே போடாதவர்கள் பத்து நாட்களும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சொன்னார்.
வீட்டில் தனிமைப்படுத்தும் உத்தரவு பெற்ற கிருமித்தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளில் இருந்து வருவோரைத் தவிர மற்ற பயணிகள் கையில் கண்காணிப்பு காப்பு அணிய வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பயணிகள் தொடர்பு தடமறிதல் செயலியைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை விரைவில் கொண்டு வரப்படும்.
கிருமித்தொற்று விதிமுறைகளில் இருந்து உடல்வெப்பநிலை பரிசோதனை நீக்கப்படுவதற்கு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
இதற்கிடையே, மலேசியாவில் ஐந்து முதல் 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி வரும் 3ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதற்கான முன்பதிவு ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.
பிள்ளைகளுக்கான ஃபைசர் தடுப்பூசி, எட்டு வார கால இடைவெளியில் இரண்டு தவணைகளாக அவர்களுக்குப் போடப்படும்.
மலேசியாவில் நேற்று 4,046 பேர் தொற்றுக்கு ஆளாகினர். இது சென்ற டிசம்பர் 18ஆம் தேதிக்குப் பிறகு அங்கு பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும்.
எனவே கூடிய விரைவில், மலேசியாவில் ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.