வியன்னா: அடுத்த மாதம் முதல் பெரியவர்களுக்கு கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைக் கட்டாயமாக்க ஆஸ்திரிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடுப்பூசியைக் கட்டாயமாக்கியுள்ள முதல் நாடானது ஆஸ்திரியா.
183 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், இச்சட்டத்திற்கு ஆதரவாக 137 பேரும் எதிராக 33 பேரும் வாக்களித்தனர். வலதுசாரியினர் தவிர ஏனையோர் ஆதரவளித்தனர்.
நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், இந்த கட்டாயத் தடுப்பூசி திட்டம் சென்ற நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் அங்கு தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதற்கு மத்தியில் இது சட்டமாக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிப்ரவரி 2ஆம் தேதி முதல் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் படிப்படியாகத் தளர்த்தவுள்ளது.
ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் குறையத் தொடங்கியுள்ளதால், தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக அதன் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் சொன்னார்.
இதன்படி, உள்ளரங்குகளில் கூடுவதற்கு இனி எண்ணிக்கை கட்டுப்பாடு கிடையாது. வெளிப்புற இடங்களில் யாரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் கிடையாது.
திங்கட்கிழமை முதல் உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி சான்றிதழ் அவசியமாக்கப்பட்டுள்ளது. இது கிருமிப் பரவலைக் குறைக்க உதவும் என்று அவர் சொன்னார்.
அயர்லாந்திலும் விரைவில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.