வாஷிங்டன்: உக்ரேன் மீதான எந்தவொரு நடவடிக்கையும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு செயலாகவே எடுத்துக்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
உக்ரேன் எல்லைப் பகுதியில் ரஷ்யா, ராணுவத்தை குவித்து வருவது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய உக்ரேன் ஆர்வமாக இருப்பதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக உக்ரேன், ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 100,000 படைவீரர்களை உக்ரேன் எல்லையில் ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே போர் சூழல் உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகயை அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, "ரஷ்யா, உக்ரேனை ஆக்கிரமிக்கப் பார்க்கிறது," என்றார்.
பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளர் டுருஸ் கூறும்போது, "சீனாவும் ரஷ்யாவும் சர்வாதிகாரத்தை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய நினைக்கின்றன.
"பெரிய தவறு செய்வதற்கு முன்னர் உக்ரேனிலிருந்து ரஷ்ய படைகள் நிச்சயம் வெளியேற வேண்டும்," என்றார்.