வாஷிங்டன்: அமெரிக்காவின் மையாமி நகரிலிருந்து லண்டன் நோக்கிச் சென்ற விமானத்தில் பயணி ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்ததைத் தொடர்ந்து அந்த விமானம் மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பியது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மையாமியில் இருந்து 129 பயணிகள், 14 பணியாளர்களுடன் வியாழனன்று லண்டனுக்குப் புறப்பட்டது.
அதில் விதியை பின்பற்றாமல் ஒரு பயணி முகக்கவசம் அணிய மறுத்துள்ளார். பயணிகள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கிருமிப் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என விமானப் பணியாளர்கள் அந்த பயணியிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் கேட்கவில்லை.
பயணி தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்ததால், விமானி உடனடியாக விமானத்தை மையாமி விமான நிலையத்திற்குத் திருப்பினார்.
விமானம் தரையிறங்கியதும் முகக்கவசம் அணிய மறுத்த அந்த பயணியை போலிசார் அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட பயணியை விமானப் பயணத்திற்கு தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்திருப்பதாகவும் விமான நிறுவனம் கூறியுள்ளது.