கராச்சி: கொலை குற்றத்திற்காக கராச்சி சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் கைதி ஒருவர், உயர்நிலைப் பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்.
சென்ற ஆண்டு நடந்த இத்தேர்வில், 35 வயதான சையத் நயீம் ஷா என்பவர் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கு பாகிஸ்தானின் பட்டயக் கணக்காளர்கள் கல்வி நிறுவனத்தின் மேற்படிப்பு உதவித்தொகை கிடைத்துள்ளது.
தேர்வில் முதல் நான்கு இடங்களைப் பிடிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் (7,600 சிங்கப்பூர் வெள்ளி) உதவித்தொகை வழங்கப்படும் என்று கல்வி நிறுவன அதிகாரி ஒருவர் சொன்னார்.
"நான் சிறையில் சிரமப்பட்டேன். இருப்பினும், தண்டனை கிடைக்கவில்லை என்றால் இது சாத்தியமாகி இருக்காது," என்றார் ஷா.
சிறையில் பாடம் நடத்தும் முன்னாள் கைதிகள் தான் தேர்வுக்குத் தயாராக ஊக்குவித்ததாக அவர் சொன்னார்.
"கராச்சி மத்திய சிறைச்சாலையில், கல்வி பயிலும் 1,200 கைதிகளில் ஒருவரான ஷாவின் இந்த வெற்றிக்கு இணையே இல்லை," என்றார் சிறை கண்காணிப்பாளர் சாயித் சூமரோ.
2010ல் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஒருவரைக் கொலை செய்ததற்காக ஷாவிற்கு 2018ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை (25 ஆண்டு) விதிக்கப்பட்டது.