கோலாலம்பூர்: ஊழல் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அசாம் பாக்கியைக் கைது செய்ய கோரி மலேசிய மக்கள் நேற்று பேரணி சென்றனர்.
பங்சார் எல்ஆர்டி நிலையம் அருகே இந்த பேரணி நடத்தப்பட்டது. இதையடுத்து அவ்விடத்திற்குச் செல்வதற்கான சாலைகள் மூடப்பட்டன. இதனால் அப்பகுதியைச் சுற்றிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இருப்பினும் நேற்று காலை 10.30 மணியிலிருந்தே குறிப்பிட்ட இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடத் தொடங்கினர். அரசியல் கட்சிகளின் இளையர் பிரிவுத் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர்.
பொது நிறுவனப் பங்குகளை அதிக அளவில் வாங்கியதில் சர்ச்சையில் சிக்கியுள்ள அசாமைக் கைது செய்யக் கோரி அவர்கள் பேரணி சென்றனர்.
ஜாலான் பங்சாரின் இறுதிவரை அணிவகுத்துச் செல்ல மட்டுமே போலிசார் அனுமதித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறி செல்வதைத் தடுக்க ஜாலான் டிராவர்ஸ்-பங்சார் சந்திப்பில் கலகத் தடுப்பு போலிசார் அணிவகுத்திருந்தனர்.
இதற்கு உடன்பட்ட ஆர்ப்பாட்டக் காரர்கள் பங்சார் எல்ஆர்டி நிலையத்திற்குத் திரும்புவதற்கு முன், கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு அங்கேயே அமர்ந்து ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். அவர்கள் கலைந்து சென்ற பிறகு தடுப்புகள் அகற்றப்பட்டன. ஜாலான் பங்சார், ஜாலான் டிராவர்ஸில் மதியம்
1 மணிக்குப் போக்குவரத்து மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியது.