பெய்ஜிங்: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தொடர்புடைய ஊழியர்கள், விளையாட்டாளர்கள் என பலர் கிருமித்தொற்றுக்கு ஆளாகி வருவதைத்தொடர்ந்து, போட்டிக்கான கிருமித்தொற்று பரிசோதனைகளில் சீனா தளர்வுகளை அறிவித்துள்ளது.
போட்டித் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்குக் குறைவான நாள்களே உள்ளன. ஜனவரி 4ஆம் தேதி முதல் ஊழியர்கள் உட்பட இதுவரை 78 ஒலிம்பிக் பங்கேற்பாளர்களுக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டு, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைவதைத் தடுக்கும் பொருட்டு, தொற்று பரிசோதனைக்கான விதிமுறைகளை மாற்றியமைப்பதாக ஒலிம்பிக் அதிகாரிகள் கூறினர்.
அத்துடன் தொற்றுக்கு ஆளானவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் ஏழு நாள்கள் மட்டும் தனிமைப்படுத்திக்கொண்டால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இது 14 நாள்களாக இருந்தது.
மேலும் தாங்கள் நீக்குப்போக்காக இருக்க முயற்சி செய்வதாகவும் குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்கி வருவதாகவும் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் குழு சொன்னது.
கிருமித்தொற்றை முற்றிலும் ஒழிப்பதில் மும்முரமாக இருக்கும் சீனா அறிவித்துள்ள இந்தத் தளர்வுகள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சில கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது சாத்தியமற்றது என்பதை சீனா ஒப்புகொள்வதைக் காட்டுவதாக உள்ளது.

