ஜெனீவா: கிருமித்தொற்று காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது, உலகெங்கிலும் உள்ள பிள்ளைகளிடையே கல்வியில் 'ஈடுசெய்ய முடியாத' இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கூடங்கள் முழுவதுமாகவோ, ஓரளவோ மூடப்பட்டிருப்பதால், 616 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் இப்போதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அது கூறியது.
அடிப்படை திறன்களைக் கற்றுக்கொள்ள முடியாததோடு, மாணவர்களின் மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கூடங்களில் கிடைக்கும் உணவு இல்லாமல், 370 மில்லியன் பிள்ளைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்பட்டுள்ளது.
"பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் மட்டும் போதாது, இழந்த கல்வியைப் பிள்ளைகள் மீண்டும் பெற தீவிர ஆதரவு வேண்டும்," என்றார் யுனிசெஃப்பின் கல்விப் பிரிவு தலைவர் ராபர்ட் ஜென்கின்ஸ்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில், பள்ளிகள் மூடப்பட்டதால், 10 வயது மாணவர்களில், 70 விழுக்காட்டினரால் எளிய உரையைப் படிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியவில்லை. தொற்றுநோய்க்கு முன்பு, இது 53 விழுக்காடாக இருந்தது.

