வாஷிங்டன்: ரஷ்யா உக்ரேன் மீது போர் தொடுக்காமல் இருக்கும் முயற்சியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புட்டினுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதன்படி, ரஷ்யா உக்ரேன் மீது படையெடுக்குமானால், தான் புட்டின் மீது தனிப்பட்ட முறையில் தடைகள் விதிக்க வேண்டிவரும் என்று திரு பைடன் கூறியுள்ளார்.
ரஷ்யத் தலைவர் புட்டின் தனிப்பட்ட முறையில் தடைகளை எதிர்நோக்க நேரிடுமா என பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அதிபர் பைடன், "ஆமாம், அது நடக்கக்கூடியதே," என்று தெரிவித்தார்.
அமெரிக்கா பொதுவாக ஒரு நாட்டின் தலைவர் மீது தனிப்பட்ட முறையில் தடைகள் விதிக்கும் பழக்கம் இல்லை.
ஆனால், உக்ரேன் எல்லையில் ரஷ்யா குவித்து வைத்திருக்கும் 100,000 துருப்பினர் உக்ரேனை தாக்கினால், இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பொருளியல் தடைகளை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யா மீதும் அந்நாட்டு தலைவரான புட்டின் மீதும் விதிக்கத் தயாராக உள்ளதாக அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
உக்ரேனை தான் தாக்கப் போவதில்லை என்று கூறும் ரஷ்யா, அதற்குப் பதிலாக அமெரிக்காவிடமிருந்து சில சலுகை
களையும் உத்தரவாதங்களையும் தான் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளது. இதில் முக்கியமாக உக்ரேனை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நேட்டோ ராணுவக் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்ற உத்தரவாதத்தை ரஷ்யா கோருகிறது. அத்துடன், முன்னாள் சோவியத் ரஷ்யாவில் அங்கம் வகித்த மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் நேட்டோ கூட்டணியில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது மற்றொரு ரஷ்யக் கோரிக்கை.
அதிபர் ஜோ பைடன் போலவே பிரெஞ்சு அதிபர் மெக்ரோனும் ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரேனை ரஷ்யா தாக்கினால் அதனால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை ரஷ்யா சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.
இந்நிலையில், உக்ரேனை ரஷ்யா தாக்கும் சாத்தியம் அதிகரித்து வரும் வேளையில் அதைத் தடுக்க தன்னால் ஆன முயற்சிகள் அனைத்தையும் ரஷ்யாவும் அதன் நட்பு நாடுகளும் எடுத்து வருகின்றன.
"உக்ரேன் தாக்கப்பட்டால் அதற்கான விலை மிக அதிகமாக இருக்கும்," என்று திரு மெக்ரோன் கூறினார்.

