நியூயார்க்: ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமிக்கு எதிரான புதுவகை தடுப்பூசியைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கான சோதனைத் திட்டத்தை தான் தொடங்கியுள்ளதாக ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனம் செவ்வாய்க்
கிழமை தெரிவித்தது.
ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள், ஓமிக்ரான் திரிபுக்கு எதிராக ஓரளவுக்குத்தான் பாதுகாப்பு வழங்குவதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், ஃபைசர்-பயோஎன்டெக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள தொண்டூழியர்களிடம் இந்தப் புதிய தடுப்பூசியைச் செலுத்தி ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனம் சோதித்துப் பார்க்கவுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கு மூன்று தவணையாகவும் ஏற்கெனவே இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியாகவும் புதிய தடுப்பூசி செலுத்திப் பார்க்கப்படும். இந்தச் சோதனைத் திட்டத்தில் 1,400க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர்.
ஓமிக்ரான் திரிபுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குவதில் ஏற்கெ னவே உள்ள இரண்டு தவணை தடுப்பூசி போதுமானதாக இருக்காது என்று ஃபைசர் முன்னதாக கூறியிருந்தது. என்றாலும், மூன்றாவது தவணை 'எம்ஆர்என்ஏ' தடுப்பூசி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக 90 விழுக்காடு பாதுகாப்பு வழங்குவதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் கூறுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் எற் கெனவே நான்காவது தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளன.

