தோக்கியோ: அதிவிரைவில் பரவக்கூடிய ஓமிக்ரான் வகை கொரோனா கிருமி நெகிழிப் பொருள்களில் அதிகபட்சம் எட்டு நாட்களும் மனிதர்களின் தோலில் 21 மணி நேரமும் உயிர்ப்புடன் இருக்கும் என்று ஓர் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
இந்த ஓமிக்ரான் கிருமி மற்ற வகை கொரோனா கிருமிகள் உயிர்ப்புடன் இருக்கும் காலகட்டத்தைக் காட்டிலும் அதிகம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜப்பானின் கியோட்டோ மருந்தியல் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வகச் சோதனையின் முடிவில் இது தெரியவந்துள்ளது.
ஓமிக்ரான் கிருமித் தொற்று டெல்டா வகைக் கிருமியைப் போல் அதிவேகமாக பரவக் கூடியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓமிக்ரான் வகை கிருமித்தொற்று உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளே இந்தக் கிருமியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்கிறது ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம்.
ஓமிக்ரான் கிருமியால் அதிகம் பாதிக்கப் பட்ட நாடுகளின் வரிசையில் பின்லாந்து முன்னணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்லாந்து (99.99%), பெல்ஜியம் (99.7%), மால்டா (99.3%), டென்மார்க் (98.8%) ஆகிய நாடுகளில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரை சோதனையிட்டதில் ஓமிக்ரான் கிருமிப் பாதிப்பே அதிகம் என்று தெரியவந்துள்ளது.
இருப்பினும் தரமான கைசுத்திகரிப்பான் பயன்படுத்திய 15 நொடிகளில் கொவிட்-19 கிருமியின் கறை செயலிழந்துவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
எனவே, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளபடி கிருமிநாசினிகளைக் கொண்டு கைகளைக் கழுவிக்கொள்வது உள்ளிட்ட தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அந்த ஆய்வாளர்கள் வலியுறுத்து
கின்றனர்.

