ஐநா: மியன்மாரில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு ஓராண்டு ஆகியுள்ள நிலையில் அங்கு நிலவும் குழப்பமான சூழல் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் இன்று கூடுகிறது. இதில் ஆசியான் அமைப்புக்கு தற்பொழுது தலைமை ஏற்றுள்ள கம்போடிய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரும் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
ஐநாவுக்கான மியன்மார் சிறப்புத் தூதரை கம்போடிய வெளியுறவு அமைச்சர் பாக் சோக்கோன் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏஎஃப்பி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் மியன்மாருக்கு கம்போடிய பிரதமர் ஹுன் சென் பயணம் மேற்கொண்டார். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. மியன்மாரில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவ ஆட்சி மன்றம் கைப்பற்றிய பின்னர் அங்கு சென்ற முதல் வெளிநாட்டுத் தலைவர் ஹுன் சென் ஆவார்.
அவருடைய இந்தப் பயணம் குறித்து வெளியுறவு அமைச்சர், ஐநா சிறப்புத் தூதருக்கு விளக்கம் அளிப்பார் என்று தெரிவதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன. மியன்மார் பிரச்சினை குறித்து ஆசியான் அமைப்பில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது.
திரு ஹுன் சென்னின் பயணம் மியன்மார் ராணுவ ஆட்சிக்கு அங்கீகாரம் அளிப்பதுபோல் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

