கோலாலம்பூர்: சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே, 'விடிஎல்' எனும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத்தடத்தின் கீழ் மேலும் அதிகமானோரை அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வனு கோபால மேனன் சொன்னார்.
ஆனால், அது இரு நாடுகளின் கிருமிப் பரவல் சூழலுக்கு உட்பட்டதாக இருக்கும் என்ற அவர், வரும் மாதங்களில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று நம்புவதாக சொன்னார்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திற்கும் இடையே சென்ற நவம்பர் மாதம் 'விடிஎல்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஜோகூர் கடற்பாலம் வழியான நிலவழி 'விடிஎல்' திட்டமும் அப்போது அறிமுகம் கண்டது.
ஆனால், ஓமிக்ரான் கிருமிப் பரவல் காரணமாக, இத்திட்டத்தின் கீழ் டிக்கெட்டுகள் விற்பனை செய்வதை டிசம்பர் 23ஆம் தேதி முதல் இம்மாதம் 20ஆம் தேதி வரை நிறுத்திவைப்பதாக இருநாடுகளும் அறிவித்தன.
இம்மாதம் 21 முதல் 'விடிஎல்' திட்டத்தின்கீழ் விமான, நிலவழிப் பயணத்திற்கான டிக்கெட் விற்பனை, முன்பு நிர்ணயிக்கப்பட்டதில் இருந்து 50 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
"அடுத்த கட்டமாக, 50 விழுக்காடு என்ற தற்போதைய எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமா என்பதைப் பார்க்கவேண்டும்.
"அல்லது மீண்டும் 100 விழுக்காட்டிற்குக் கொண்டு வரமுடியுமா என்பது தெரியவில்லை. சூழ்நிலைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும்," என்று பெர்னாமாவிற்கு அளித்த பேட்டியில் மேனன் சொன்னார்.