சோல்: வடகொரியா கடந்த ஐந்தாண்டுகளில் மிகப்பெரிய ஏவுகணை சோதனையை நேற்று நடத்தியுள்ளது.
இம்மாதம் வடகொரியா நடத்தியுள்ள ஏழாவது ஏவுகணை சோதனை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடுத்தர தொலைவு இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை வடகொரியாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து விண்ணில் ஏவப்பட்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
நவம்பர் 2017க்குப் பிறகு வடகொரியா இப்போதுதான் இவ்வளவு பெரிய ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளதாகவும் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை 2,000 கிமீ உயரத்தை எட்டியதாகவும் 800 கிமீ தூரத்தை 30 நிமிடங்களில் கடந்து, ஜப்பான் கடலில் இறங்கியது என்றும் ஜப்பானிய, தென் கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதிப்பதற்கான சுய தடையை, வடகொரியா கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டதை இது காட்டுவதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் சொன்னார்.
இந்த மாதம் வடகொரியா நடத்திவரும் தொடர் ஏவுகணை சோதனைகள், 2017ஆம் ஆண்டில் நிலவிய உச்சகட்ட பதற்றத்தை நினைவூட்டுவதாகவும் அவர் சொன்னார்.
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னோ, தனது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வதாக கூறுகிறார்.

