கோலாலம்பூர்: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியர்கள், தளர்த்தப்பட்ட கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளுடன் சீனப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள்.
மாநிலங்களுக்கு இடையே பயணம், ஒன்றுகூடலுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது கொண்டாட்ட உணர்வை அதிகரிக்கச் செய்துள்ளது.
திறந்த இல்ல உபசரிப்புகளுக்கு அனுமதி இல்லை என்றாலும், குடும்பத்தினர் ஒன்றுகூடவும் உணவகத்திற்குச் செல்லவும் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லவும் தடை எதுவும் இல்லை. இதையடுத்து பல உணவகங்கள் முற்றிலும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
"எல்லா மேசைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. கட்டுப்பாடுகள் காரணமாக ஒரு மேசையில் ஆறு பேர் வரை மட்டுமே அமர முடியும்," என்றார் கோலாலம்பூர் உணவக உரிமையாளர் ஒருவர்.
கொண்டாட்டத்திற்கு மத்தியில், மக்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் பல அதிகாரிகள் அடங்கிய 2,532 செயல்பாட்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

