பெய்ஜிங்: சீனாவில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்கள் சுதந்திரமாக செய்திகளை வெளியிடுவதில் இதுவரையில்லாத அளவுக்குத் இடையூறுகளை எதிர்கொள்வதாக ஊடகக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
சட்ட நடவடிக்கை அச்சுறுத்தல்கள், இணைய எதிர்ப்பு பிராசாரங்கள் போன்றவை வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுவதாக 'எஃப்சிசிசி' எனும் சீனாவின் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடுப்பதை சீனா தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக அக்குழுவின் ஆண்டறிக்கை கூறுகிறது.
குழுவின் 192 உறுப்பினர்களில் 127 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்
ளது.
"வெளியிடப்படும் செய்திகள் தொடர்பாக குறிப்பிட்ட நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்படக்கூடும் அல்லது அதன்மீது சிவில் வழக்குகள் தொடுக்கப்படக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
"உச்சக்கட்டமாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் விசாரணைகளுக்கு உட்பட வேண்டியிருக்கும் என்றும் செய்தி நிறுவனங்கள் எச்சரிக்கப்படுகின்றன," என்றார் தி இக்னாமிஸ்ட் ஊடகத்தின் பெய்ஜிங் தலைமைச் செய்தியாளரான டேவிட் ரென்னி.
ஆபத்துகள் அதிகமாகி வருவதால், சில வெளிநாட்டுச் செய்தியாளர்களும் அந்த நிறுவனங்களும் அவசரகால வெளியேற்றத் திட்டத்தை உருவாக்கியுள்ளதாக குழுவின் அறிக்கை கூறுகிறது.
அரசாங்கத்தின் ஆதரவோடு நடத்தப்படும் தாக்குதல்கள், குறிப்பாக, இணைய எதிர்ப்பு பிரசாரங்கள், சீனாவில் தொடர்ந்து நீடிக்க விரும்பும் செய்தியாளர்களின் செயல்பாட்டைச் சிரமமாக்குவதாகவும் அது கூறுகிறது.

