வாஷிங்டன்: ஐந்து வயதுக்குகீழ் உள்ள பிள்ளைகளுக்கு வரும் 21ஆம் தேதி முதல் கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு மையத்தின் ஆவணம் ஒன்று கூறுகிறது.
இரண்டு முதல் நான்கு வயது பிள்ளைகளிடம் இதற்கான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அவர்களுக்கு
3 மைக்ரோகிராம் அளவு தடுப்பூசி போடப்பட்டது. அதில் ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசி பரிசோதனைக்கான முக்கிய இலக்கை எட்டவில்லை.
இருப்பினும், அத்தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
உணவு, மருந்து நிர்வாகம் கேட்டபடி அங்கீகாரம் அளிப்பதற்குத் தேவையான கூடுதல் தகவல்களைச் சமர்ப்பித்துள்ளதாக மருந்து நிறுவனம் கூறியது.
அங்கீகாரம் அளிக்க பரிந்துரைப்பது பற்றி கலந்தாலோசிக்க உணவு, மருந்து நிர்வாகத்தின் ஆலோசகர்கள் வரும் 15ஆம் தேதி கூடுகின்றனர்.
அதன் பிறகு ஒரு வாரத்திற்குள் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, முதல்கட்டமாக இம்மாத இறுதிக்குள் மாநிலங்களுக்கு 10 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்ப அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் அந்த ஆவணம் கூறுகிறது.
அடுத்த கட்டமாக பிப்ரவரி 23, 25ஆம் தேதிகளில் மேலும் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 18 மில்லியன் பிள்ளைகள் ஆறு முதல் நான்கு வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்களில் எளிதில் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மையம் கூறியது.
பெரியவர்களுக்கு 30 மைக்ரோகிராம் அளவும் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு 10 மைக்ரோகிராம் அளவுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இதற்கிடையே, ஓமிக்ரான் கிருமிக்கு எதிரான போராட்டத்தில் நான்காவது தவணை தடுப்பூசி தேவைப்படக்கூடும் என்று அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபௌசி கூறியுள்ளார்.
அது, குறிப்பிட்ட நபரின் வயது அடிப்படையிலும் நாள்பட்ட நோய்களின் அடிப்படையிலும் இருக்கும் என்றார் அவர்.

