மணிலா: பிலிப்பீன்ஸ் நேற்று முதல், தடுப்பூசி போட்டுக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் தனிமைப்படுத்தல் இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதித்துள்ளது.
அத்துடன் தொற்றுச் சம்பவங்களின் அடிப்படையில், நாடுகளை வகைப்படுத்துவதையும் பிலிப்பீன்ஸ் கைவிட்டுள்ளது.
சுற்றுலாத் துறையைப் பெரிதும் நம்பியிருக்கும் பிலிப்பீன்சின் பொருளாதாரம் மீட்சி பெறுவதற்கு இது உதவும் என்கிறது பிலிப்பீன்ஸ்.
இதற்கிடையே, தலைநகர் மணிலாவில் கிருமித்தொற்று அபாய எச்சரிக்கையை ஆக குறைந்த நிலைக்கு கீழிறக்குவது குறித்தும் அந்நாடு பரிசீலித்து வருகிறது.
அபாய எச்சரிக்கை குறைக்கப்பட்டால் தொழிற்சாலைகள் முழுவீச்சில் செயல்படத் தொடங்கும். மணிலாவில் தொற்றுக்கு ஆளாவோர் தினசரி எண்ணிக்கை 1,000த்திற்கும்கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற மாதம் அது 11,000ஆக இருந்தது. தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதமும் 15 விழுக்காட்டில் இருந்து 9.1 விழுக்காடாக குறைந்துள்ளது.
ஏற்கெனவே 500 பள்ளிக்கூடங்கள் நேரடி கல்விமுறையைத் தொடங்கியுள்ள நிலையில், மேலும் 6,000 பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பது குறித்தும் பிலிப்பீன்ஸ் ஆராய்ந்து வருகிறது.

