ஹாங்காங்: ஹாங்காங், வியட்னாம், ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளில் தொற்றுச் சம்பவங்கள் பெருமளவு அதிகரித்துள்ளன. இதனால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.
ஹாங்காங்கில் புதன்கிழமையன்று ஆக அதிகமாக 1,161 பேர் தொற்றுக்கு ஆளாகினர். அதாவது, பிப்ரவரி 1ஆம் தேதிக்குப் பிறகு தொற்றுச் சம்பவங்கள் 10 மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், கிருமித்தொற்று பரிசோதனைக்காகவும் தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்படுவதற்காகவும் அந்நாட்டு மக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இதுகுறித்து தான் மிகவும் வருந்துவதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் சொன்னார். மார்ச் மாத இறுதியில் அந்நாடு நாளொன்றுக்கு ஏறத்தாழ 28,000 தொற்றுச் சம்பவங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவிலும் கிருமி தொற்றியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுய சிகிச்சை முறையை அந்நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, நேற்று முதல், 60, அதற்கும் மேற்பட்ட வயதுடைய கொவிட்-19 நோயாளிகளை மட்டுமே மருத்துவ ஊழியர்கள் கவனிப்பார்கள்.
மற்றவர்கள் தங்களைக் கண்காணித்துக்கொள்ள வேண்டும் என்றும் நிலைமை மோசமடைந்தால் அவர்கள் மருந்தகங்களில் சிகிச்சைக்குச் செல்லவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வியட்னாமில் சென்ற வாரம் 15,000மாக இருந்த தொற்றுச் சம்பவங்கள், நேற்று 24,000ஆக பதிவானது. அரசாங்க மருத்துவமனைகளில் நோயாளிகளைச் சமாளிக்க முடியாத நிலையில், தனியார் மருத்துவமனைகளின் உதவியை நாடியுள்ளது அரசாங்கம்.
ஜப்பானில் தொற்று உச்சமடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

