மாஸ்கோ: உக்ரேன் எல்லைகளில் ரஷ்யப் படைகள் குவிக்கப்படுவதைப் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவும் பெலரசும் 10 நாட்கள் கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடங்க உள்ளன.
பீரங்கிகள், போர் விமானங்கள், அதிக திறன்மிக்க S-400 ஏவுகணை-தற்காப்பு விமானங்கள் ஆகியவற்றுடன் பிப்ரவரி 20 வரை இந்தப் பயிற்சிகள் நடைபெறும்.
இப்பயிற்சியில் ஏறத்தாழ 30,000 ரஷ்ய படை வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
ரஷ்யாவும் பெலரசும் இதுவரைஇல்லாத அளவுக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால், இப்பயிற்சி முக்கியமானது என்றது ரஷ்யா.
உக்ரேன், நேட்டோ உறுப்பினர்களான போலந்து, லித்துவேனியா நாடுகளுக்கு அருகில் பயிற்சிகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
தற்போதுள்ள பதற்றத்திற்கு மத்தியில் மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சி, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், போர் தொடுப்பது குறித்து ரஷ்யா இன்னமும் முடிவு எதையும் எட்டவில்லை என்றாலும், அடுத்த சில நாட்கள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்றார்.

