ஹோனலுலு: உக்ரேன் எல்லையில் ரஷ்யா பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள ஒன்றிணைந்து செயல்படப்போவதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கூறியுள்ளனர். வடகொரியா அண்மையில் நடத்திய அணுவாயுதச் சோதனைகள் பற்றியும் மூவரும் கண்டித்துப் பேசினர்.
வட்டார அளவில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தத் தங்கள் நாடுகள் வலுவாக ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தைத் திரு பிளிங்கன், ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சங் இய்-யோங் ஆகியோர் வலியுறுத்தினர்.
ஹவாயியில் பல்வேறு அம்சங்களை அலசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டனர். உக்ரேன் எல்லையில் ரஷ்யாவின் ராணுவப் படைகள் ஒன்றுகூடியிருப்பதைப் பற்றிப் பேசிய அமைச்சர்கள், உக்ரேனின் அரசுரிமைக்கு அசைக்கமுடியாத ஆதரவு வழங்குவதாக அறிக்கையில் தெரிவித்தனர்.
ரஷ்யா உக்ரேனைப் படை எடுக்கக்கூடும் என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைத் தொடர்ந்து 12க்கும் அதிகமான நாடுகள் உக்ரேனில் இருக்கும் தங்கள் நாட்டவரை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகியவை அவற்றில் அடங்கும்.
உக்ரேனுக்குப் பயணம் மேற்கொள்ளவேண்டாம் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனது மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
உக்ரேன் எல்லையில் மாஸ்கோ சுமார் 100,000 துருப்புகளை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், அந்நாட்டைப் படையெக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அது கூறி வருகிறது.
இப்பிரச்சினைக்கு மத்தியில் தனது ஆகாயவெளியை மூடுவதில் எந்தப் பலனும் இல்லை என்று உக்ரேன் சொல்கிறது.
அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்தப்போவதாக நெதர்லாந்தின் 'கேஎல்எம்' விமானச் சேவை நேற்று முன்தினம் கூறியது. இதர சில விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதியன்று கிழக்கு உக்ரேன் ஆகாயவெளிப் பகுதியில் தவறுதலாக சுடப்பட்டதால் மலேசிய ஏர்லைன்ஸின் எம்ஹெச்17 பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அதிலிருந்த அனைவரும் மாண்டனர்.

