கான்பெரா: நேற்றைக்குள் ஆர்ப்பாட்டங்களை நிறுத்திக்கொள்ளுமாறு ஆஸ்திரேலியக் காவல்துறை ஆயிரக்கானோருக்குக் கெடு விதித்தது.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயப்படுத்தும் சட்டங்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கானோர் பல நாள்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
தலைநகர் கான்பெராவின் முக்கியப் பகுதிகள் பலவற்றில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகே திரண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
ஆகக் கடைசி நிலவரப்படி கான்பெராவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லை. நேற்றைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடிய இடங்களிலிருந்து வெளியேறாவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
நியூசிலாந்து தலைநகர் வெல்லிங்டனிலும் தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயப்படுத்தும் சட்டங்களை எதிர்த்துப் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
நியூசிலாந்தின் பல்வேறு பகுதிகளில் டொவி சூறாளி ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தியது. அவசியமற்றப் பயணங்களை மேற்கொள்ளவேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. பல இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டது. ஆனால் இந்தப் பிரச்சினைகூட ஆர்ப்பாட்டக்காரர்களை நிறுத்தவில்லை.
இதற்கிடையே, கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் அதிகம் பாதிக்கப்படாமல் இருந்த சிறிய நாடான கூக் தீவுகளில் முதன்முறையாக சமூக அளவில் ஒருவருக்குக் கிருமித்தொற்று ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிருமித்தொற்றுக்கு ஆளான ஒருவர் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து சமூக அளவில் கொவிட்-19 பரவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிருமித்தொற்றுக்கு ஆளான அந்த பயணி நியூசிலாந்திலிருந்து கூக் தீவுகளுக்குச் சென்றார்.

