உக்ரேன் - ரஷ்யா இடையே பதற்றநிலை அதிகரித்து வரும் வேளையில், உக்ரேனில் இருக்கும் சிங்கப்பூரர்கள் முடிந்த அளவிற்கு விரைவாக அந்நாட்டைவிட்டு வெளியேறும்படி வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
உக்ரேனில் சிங்கப்பூர் தூதரகம் இல்லை என்பதால், அவ்விரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டுவிட்டால் சிங்கப்பூரர்கள் உக்ரேனைவிட்டு வெளியேற தன்னால் உதவ முடியாத நிலை ஏற்படலாம் என்று அமைச்சு தெரிவித்தது.
உக்ரேனிலுள்ள சிங்கப்பூரர்கள் உடனடியாக வெளியுறவு அமைச்சின் 'இ-ரிஜிஸ்டர்' இணையப்பக்கம் வாயிலாகப் பதிவுசெய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தூதரக உதவி தேவைப்பட்டால் 6379-8800/55 எனும் எண்களில் அழைக்கலாம்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், பல்கேரியா, கனடா, எஸ்டோனியா, ஜெர்மனி, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லித்துவேனியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, சவூதி ஆரேபியா, ஸ்லோவேனியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய நாடுகளும் உக்ரேனில் உள்ள தங்கள் குடிமக்கள் அந்நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தி வருகின்றன.


