பெட்டாலிங் ஜெயா: மணிலாவில் உள்ள நினோய் அக்கினோ அனைத்துலக விமான நிலையத்தில் மலேசியாவைச் சேர்ந்த 15 பேர் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் செய்வதறியாது திண்டாடி வருகின்றனர்.
மலேசியாவில் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் பிலிப்பீன்சில் நுழைய அனுமதியில்லை என்று பிலிப்பீன்ஸ் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பெயர் தெரிவிக்க விரும்பாத மலேசிய பயணிகளில் ஒருவர், மலேசிய மின்னிலக்க தடுப்பூசி சான்றிதழ் 'மைசேஜாதேரா'வை ஏற்றுக்கொள்ளக்கூடிய தடுப்பூசி சான்றிதழ் அல்ல என்று பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் கூறியதாகச் சொன்னார்.
இதையடுத்து மலேசிய பயணிகள் 15 பேரும் பிலிப்பீன்சில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதனால் மணிலா விமான நிலையத்திலேயே அவர்கள் திண்டாடி வருகின்றனர்.
சென்ற ஞாயிற்றுக் கிழமை அன்று கோலாலம்பூரிலிருந்து அவர்கள் மணிலா வந்து சேர்ந்தனர்.
மலேசியர்களின் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இன்று தாயம் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனத் தெரிகிறது.
"சிங்கப்பூர் மற்றும் பிரிட்டனில் தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
"ஆனால் மலேசியாவில் தடுப்பூசி போட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை," என்று ஞாயிறு இரவு அந்த மலேசியப் பயணி தெரிவித்தார்.

