மிதமான கிருமித் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள், கொவிட்-19 விரைவு பரிசோதனை மையங்களில் 'ஏஆர்டி' சுயபரிசோதனை செய்துகொள்ளும்போது, அவர்களின் சோதனை முடிவுகள் அவர்களுடைய 'ஹெல்த்ஹப்' செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.
தற்போது கொவிட் பரிசோதனை முடிவுகளை தங்கள் பொதுச் சுகாதார விவரங்களில் பதிவு செய்துகொள்ள விரும்புவோர் பொது மருத்தவரைப் பார்க்கவேண்டும்.
இதனால் பொது மருந்தகங்களுக்கு அதிகமான நோயாளிகள் செல்கின்றனர்.
அவற்றின் பளுவைக் குறைக்க இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.
கொவிட்-19 விரைவு பரிசோதனை மையங்களில் பயிற்சிபெற்ற ஊழியர்களின் மேற்பார்வையின்கீழ் 'ஏஆர்டி' சுயபரிசோதனை செய்துகொள்ளலாம். இதற்கான கட்டணம் $15.
இதற்கிடையே, ஓமிக்ரான் தொற்று அலையை சிங்கப்பூர்ச் சுகாதாரத் துறை எவ்வாறு சமாளித்துவருகிறது என்று நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்விக்கு, நாடு தற்போது ஓமிக்ரான் தொற்று அலையின் மத்தியில் இருப்பதாகவும், ஒரு நாளைக்குத் தொற்றுச் சம்பவங்கள் 15,000லிருந்து 20,000 வரை உயரக்கூடும் என அமைச்சர் ஓங் பதிலளித்தார். ஆனால் தொற்று உள்ள பலருக்கும் மிதமான அறிகுறிகளே இருப்பதால், இதை எளிதில் சமாளித்துவிடலாம் என்றார் அவர்.


