சொந்தமாக சூடுபடுத்தி, உண்ண தயாரான நிலையில் உள்ள உணவுகளுக்கு அனைத்து மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்களிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அத்தகைய உணவுகளை விமானத்திகுக் கொண்டுவரக்கூடாது என்று மலேசிய ஏர்லைன்ஸ் அதன் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தடை உடனடியாக நடப்புக்கு வருவதாக அது கூறியது.
"மெக்னீசியம் தூள், இரும்புத் தூள், கெட்டியான கரிமம் அல்லது கால்சியம் ஆக்சைட் போன்ற ஆபத்தான பொருள்கள் அத்தகைய உணவுப் பொட்டலங்களில் உள்ளன. தண்ணீருடன் தொடர்பில் வரும்போது எரியக்கூடிய வாயுவை இந்தப் பொருள்கள் வெளியேற்றும்," என்று மலேசிய ஏர்லைன்ஸ் விவரித்தது.
தன்னுடைய பயணிகள் மற்றும் விமானச் சிப்பந்திகளின் பாதுகாப்புக்கு தான் தலையாய முன்னுரிமை அளிப்பதாக அது கூறியது.
மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவுக்குப் பின்னணியில் ஏதேனும் சம்பவம் நிகழ்ந்ததா என்பது குறித்து தெரியவில்லை.


