மாஸ்கோ: ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பாதுகாப்பு விஷயங்கள் குறித்து அமெரிக்கா, நேட்டோவுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
ஆனால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் சில கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
ஜெர்மானிய தலைவர் ஒலஃப் ஸ்கால்ஸுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய அவர் இவ்வாறு சொன்னார்.
ஐரோப்பாவில் நடுத்தர தொலைவு ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள், ராணுவ பயிற்சிகள் பற்றிய வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான விவாதங்களில் ஈடுபட ரஷ்யா தயாராக இருப்பதாக புட்டின் கூறினார்.
இதற்கிடையே, நேற்று மேலும் சில படைகளை உக்ரேன் எல்லையில் இருந்து மீட்டுக்கொள்வதாக ரஷ்யா கூறியது.
கிரைமியாவில் நடைபெற்ற ராணுவ பயிற்சி முடிந்துவிட்டதாக அது கூறியுள்ளது.
ஆனால், பிரிட்டிஷ் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ், "தங்கள் நடவடிக்கையிலிருந்து ரஷ்யா பின்வாங்குவதற்கான எந்த அறிகுறியையும் தான் பார்க்கவில்லை," என்றார்.
அதேசமயம், பெலராஸ் பகுதியில் ரஷ்ய படைகள் வரும் 20ஆம் தேதி வரை பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யப் படைகளின் ஒரு பகுதி திரும்பப் பெறப்பட்ட போதும் போருக்கான சாத்தியம் நீங்கிவிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
போர் மூண்டால் அனைத்துலக அளவில் ரஷ்யா கடும் கண்டனத்தைச் சந்திக்க நேரிடும் என்றும் பெரும் பொருள்சேதமும் உயிர்ச்சேதமும் ஏற்படும் என்றும் பைடன் சுட்டிக் காட்டியுள்ளார்.
இவற்றுக்கு மத்தியில், உக்ரேனின் தற்காப்பு அமைச்சு, இரண்டு வங்கிகள் உள்ளிட்டவற்றின் இணைய செயல்பாடுகள் நேற்று ஸ்தம்பித்தது. இதற்கு ரஷ்யாதான் காரணம் என்று உக்ரேனின் தகவல் பாதுகாப்பு அமைப்பு கூறியது.
அமைச்சின் இணையத்தளம் இணைய ஊடுருவலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அதனைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சு சொன்னது.
தற்காப்பு அமைச்சின் இணையதள பக்கத்தில், 'பராமரிப்பில் உள்ளது' எனக் கூறப்பட்டிருந்தது.

