சோல்: தென்கொரியாவில் இதுவரையில்லாத அளவில் நேற்று 90,000 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
முந்திய நாள் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 57,000ஆக இருந்தது.
கட்டுப்பாடுகள், பரிசோதனை, தொடர்பு தடமறிதல் போன்றவற்றின் காரணமாக தென்கொரியாவில் தொற்றுச் சம்பவங்களும் உயிரிழப்புகளும் கட்டுக்குள் இருந்துவந்தன.
இந்நிலையில், ஒமிக்ரான் பரவல் காரணமாக ஒரே வாரத்தில் அன்றாட பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
எனவே, தொடர்பு தடமறிதல், தனிமைப்படுத்தல் ஆகியவற்றைக் கைவிட்ட தென்கொரியா வீட்டிலேயே குணமடையும் முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, தற்போதைய கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரதமர் கிம் பூ-கியூம் கூறியிருக்கிறார்.
உணவகங்கள், மதுபானக்கூடங்கள் இரவு 9 மணிக்கு மேல் செயல்படுவதற்கு உள்ள தடை, ஆறுக்கும் மேற்பட்டவர்கள் கூடுவதற்கான தடைகள் தளர்த்தப்படக்கூடும் என்று தெரிகிறது.
அடுத்த மாதம் 9ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தளர்வுகள் குறித்து நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும்.
ஆனால், தளர்வுகளால் தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்றும் அது நாட்டின் சுகாதார அமைப்பை நிலைகுலையச் செய்துவிடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

