நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த 64 வயது பெண் ஒருவர் எய்ட்ஸ் நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார்.
இந்தப் பெண்ணுக்கு தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2013ஆம் ஆண்டில் இந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவர் அப்பெண்ணுக்கு தொப்புள் கொடி ரத்தம் தானம் செய்தார். பின்னர் அந்த பெண்ணுக்கு அதன் ஸ்டெம் செல்கள் செலுத்தி, அவரின் நோயெதிர்ப்பு திறனைப் பலப்படுத்த மருத்துவர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதன் பிறகு மருத்துவர்கள் அவருக்கான எய்ட்ஸ் சிகிச்சையை நிறுத்தினர்.
அவ்வாறு நிறுத்தி 14 மாதங்கள் ஆன நிலையிலும் அவரது உடலில் மீண்டும் எச்ஐவி கிருமி கண்டறியப்படவில்லை என்றனர் மருத்துவர்கள். புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டுள்ள இவர், எய்ட்ஸ் நோயிலிருந்து குணமடைந்த முதல் பெண் ஆவார்.