வாஷிங்டன்: உக்ரேன் எல்லையை ஒட்டிய பகுதியில் இருந்து தனது படைகள் திரும்பப் பெறப்பட்டதாக ரஷ்யா சொல்வது பொய் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
மாறாக எல்லையில் ரஷ்யா தனது படைபலத்தை அதிகப்படுத்தியுள்ளதாகவும் அமெரிக்கா சந்தேகிக்கிறது.
ரஷ்யா மேலும் 7,000 படை வீரர்களை எல்லையில் குவித்துள்ளதாக அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சொன்னார்.
தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி, அவர்களில் பெரும்பாலானோர் புதன்கிழமையன்று எல்லையைச் சென்று சேர்ந்ததாக அவர் சொன்னார்.
பொதுவெளியில் அரசதந்திர தீர்வை விரும்புவதாக கூறும் ரஷ்யா, உள்ளுக்குள் போருக்குத் தயாராகி வருவதாகவும் அவர் சொன்னார்.
"குறிப்பிட்ட சில இடங்களில் ராணுவப் பயிற்சி முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு படைகள் தங்களது இடங்களுக்குத் திரும்பும். அதற்குச் சில காலம் ஆகும்," என்று ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிம்ட்ரி பெஸ்கோவ் நேற்று சொன்னார்.
இதற்கிடையே, ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரேனியப் படைகளுக்கும் இடையே கிழக்கு உக்ரேனில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் சாடுகின்ற
னர்.
இதையடுத்து தாக்குதல் தீவிரமடைந்ததா அல்லது போர்நிறுத்த ஒப்பந்ததை மீறி கடந்த எட்டு ஆண்டுகளாக நடக்கும் வழக்கமான மோதலா இது என்பதை உறுதியாக கூறமுடியவில்லை என்கின்றன ஊடகங்கள்.
உக்ரேன் மீது போர் தொடுக்க, ரஷ்யா கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதலை காரணமாக சொல்லக்கூடும் என்று மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து எச்சரித்துகொண்டே இருக்கின்றன.
ஆனால், பதற்றத்தைத் தூண்டி உக்ரேன் அப்பகுதியை மீண்டும் கைப்பற்ற முனைவதாக ரஷ்யா கூறுகிறது.

