மூன்று நாள்களாக தீப்பற்றி எரிந்த கப்பல் ஒன்றில் பயணி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) உயிருடன் கண்டறியப்பட்ட சம்பவம் ஐரோப்பிய நாடான கிரீஸ் அருகே நிகழ்ந்தது.
தீக்கிரையான அந்தக் கப்பல், துறைமுகத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டபோது அதில் 21 வயது ஆடவர் ஒருவர் உயிருடன் இருந்ததை மீட்புப் பணியாளர்கள் கண்டறிந்தனர்.
கனரக வாகன ஓட்டுநரான அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்குக் கூடுதல் சிகிச்சை அளிக்க வேறொரு படகிற்கு அவர் மாற்றப்பட்டார்.
கிரீசில் இருந்து இத்தாலிக்குச் சென்றுகொண்டிருந்த அந்தக் கப்பலில் கடந்த வியாழக்கிழமை தீ மூண்டது. அதில் கிட்டத்தட்ட 300 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்தப் படலில் இருந்த 11 கனரக வாகன ஓட்டுநர்களைக் காணவில்லை என்று கரையோரக் காவல் படையினர் கூறியுள்ளனர். தீ ஏற்பட்டபோது தத்தம் லாரிகளில் அந்த ஓட்டுநர்கள் தூக்கத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. மீட்புப் படையினர் வெள்ளிக்கிழமை 281 பேரை மீட்டனர்.
அந்தக் கப்பலில் 239 பயணிகளும் 51 கப்பல் பணியாளர்களும் இருந்ததாக அதிகாரபூர்வத் தகவல்கள் கூறுகின்றன. அத்துடன், அதில் 153 கனரக வாகனங்களும் 32 பயணிகள் வாகனங்களும் இருந்தன.


