ஜகார்த்தா: இந்தோனீசியா 'மேரா புத்தே' என்னும் தனது சொந்தத் தயாரிப்பு தடுப்பூசியை பரிசோதித்து வருகிறது. மக்களுக்கு அந்தத் தடுப்பூசியைப் போட்டு பரிசோதிக்கும் முதற்கட்ட மருத்துவப் பரிசோதனை தற்போது நடந்து வருகிறது. இந்தோனீசிய மக்களில் 65 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில், உள்நாட்டிலேயே தடுப்பூசியைத் தயாரிப்பது இந்தோனீசியாவுக்கு நல்லதொரு முன்னேற்றம் என்று பகுப்பாய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
நாட்டின் தேசிய கொடியின் நிறத்தைக் குறிக்கும் வகையில் சிவப்பு, வெள்ளை (மேரா புத்தே) என தடுப்பூசிக்குப் பெயரிடப்பட்டு உள்ளது. இதன் மீதான ஆராய்ச்சியை சுரபாயாவைத் தளமாகக் கொண்ட ஏர்லெங்கா பல்கலைக்கழகமும் உள்ளூர் மருந்தக நிறுவனமான பயோட்டிஸ் பார்மாசூட்டிகல்சும் இணைந்து நடத்தி உள்ளன.
தடுப்பூசி மீதான முதற்கட்டப் பரிசோதனை இம்மாதம் 9ஆம் தேதி தொடங்கியது. 90 தொண்டூழியர்களுக்கு இது செலுத்தப்பட்டது. இரண்டாம் கட்டப் பரிசோதனை மார்ச் மாதம் தொடங்கும்போது 405 தொண்டூழியர்களையும் ஏப்ரலில் தொடங்கி நடைபெற இருக்கும் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 5,000 தொண்டூழியர்களையும் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது.
கிருமித்தொற்றுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை மனித உடலில் இந்தத் தடுப்பூசி உருவாக்குகிறதா என்று முதற்கட்டப் பரிசோதனையில் உறுதிசெய்த பின்னரே அடுத்தடுத்த கட்டப் பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அனைத்துப் பரிசோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டால், இவ்வாண்டு ஜூலை மாதம் அவசரநிலைப் பயன்பாட்டுக்கான அனுமதியை இந்தோனீசிய உணவு, மருந்துப்பொருள் கண் காணிப்பு ஆணையம் வழங்கும் என்றும் அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் பொதுமக்களுக்கு போட தடுப்பூசி தயாராகிவிடும் என்றும் ஆய்வை முன்னின்று நடத்திவரும் ஏர்லெங்கா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஃபெடிக் அப்துல் ரஹ்மான் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் கூறினார்.

