கோலாலம்பூர்: மலேசிய நல்வாழ்வுத் துறையின் பராமரிப்பின்கீழ் இருக்கும் மூன்று பிள்ளைகளை அவர்களது தாயாரிடம் அந்நாட்டு உயர் நீதிமன்றம் சேர்த்துவைத்துள்ளது.
தமது மூன்று பிள்ளைகளையும் நல்வாழ்வுத் துறை உடனடியாக தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவை திருவாட்டி லோ சியூ ஹொங் தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து, இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. நல்வாழ்வுத் துறை மூன்று பிள்ளைகளையும் திருவாட்டி லோவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதியன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்குவேரா சுட்டினார்.
அதே தீர்ப்பை அவர் நேற்று வழங்கினார்.
மூன்று பிள்ளைகளும் திருவாட்டி லோவுக்கும் நாகேஸ்வரன் முனியாண்டி என்பவருக்கும் பிறந்தவர்கள். திருமணமானபோது திரு நாகேஸ்வரன் முனியாண்டி இந்து சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தார். திருவாட்டி லோ பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர். அவர்களது பிள்ளைகள் அனைவரும் பிறந்தபோது இந்துக்களாகப் பதிவு செய்யப்பட்டனர்.
திருவாட்டி லோவை திரு நாகேஸ்வரன் முனியாண்டி
அடிக்கடி அடித்துத் துன்புறுத்தியதாக அவரது வழக்கறிஞர் திரு ஏ. ஸ்ரீமுருகன் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டில் திரு நாகேஸ்வரன் முனியாண்டி அடித்ததில் காயம் ஏற்பட்டு
மருத்துவமனையில் திருவாட்டி லோ அனுமதிக்கப்பட்டார்.
அதற்கு முன்பே இஸ்லாமிய சமயத்துக்கு மாறியிருந்த திரு நாகேஸ்வரன் முனியாண்டி, திருவாட்டி லோ மருத்துவமனையில் இருந்தபோது யாருக்கும் தெரியாமல் மூன்று பிள்ளைகளையும் இஸ்லாமிய சமயத்துக்கு மதம் மாற்றினார்.
திருவாட்டி லோவும் திரு நாகேஸ்வரன் முனியாண்டியும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதியன்று விவாகரத்து செய்துகொண்டனர். திரு நாகேஸ்வரன் முனியாண்டி போதைப்பொருள் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு கிளந்தான் மாநிலத்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
மணமுறிவுக்குப் பிறகு, தமது பிள்ளைகளைத் தம்முடன் வைத்திருக்க திருவாட்டி லோ சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தார். ஆனால் கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக வழக்கு
விசாரணை தடைப்பட்டது.
தமது பிள்ளைகளைப் பார்க்கவோ வீட்டுக்கு அழைத்துச் செல்லவோ நல்வாழ்வுத் துறை அனுமதிக்கவில்லை என்று திருவாட்டி லோ கூறினார்.
தமது பிள்ளைகளை நல்வாழ்வுத் துறை முதலில் பினாங்கில் வைத்திருந்ததாகவும் பிறகு பெர்லிஸ் மாநிலத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் தெரிவத்தார். மூன்று பிள்ளைகளையும் 35 வயது திருவாட்டி லோவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மலேசிய உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்ததை அடுத்து, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக திருவாட்டி லோ அவர்களைச் சந்தித்தார்.
தமது 14 வயது இரட்டை மகள்களையும் 10 வயது மகனையும் கெடா மாநிலத்தின் ஜிட்ராநகரில் சந்தித்தார்.
திருவாட்டி லோவுக்கு மேற்கொண்டு எவ்விதப் பிரச்சினையும் தராமல் அவரது பிள்ளைகளை அவரிடம் சுமுகமான முறையில், உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று நல்வாழ்வுத் துறை
யிடம் மலேசிய சீனர் சங்கத்தின் மகளிர் பிரிவு கேட்டுக்
கொண்டது.

