கீவ்: கிழக்கு உக்ரேனில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஏவுகணை தாக்கப்பட்டதில், சிதைவுகளுக்கு மத்தியில் கிடந்த தம்முடைய தந்தையின் சடலத்துக்குப் பக்கத்தில் நின்றார் ஆடவர் ஒருவர்.
"தந்தையை நான் அங்கிருந்து புறப்படச் சொன்னேன்," என்று அவர் கண்ணீர் மல்கக் கூறினார்.
அருகில் இருந்த மாது ஒருவர், வானத்தை நோக்கி புலம்பித் தீர்த்தார்.
குடியிருப்புக் கட்டடங்கள் இருந்த பகுதியை ஏவுகணை ஒன்று தாக்கியது. தீயணைப்பாளர்கள் அரும்பாடுபட்டு தீயை அணைத்தனர். அப்பகுதியில் இருந்த பல்வேறு கட்டடங்கள் மோசமாக சேதமுற்றன. அவற்றின் சன்னல்கள் சிதறிக் கிடந்தன.
"இது நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் கிராமத்திற்குப் புறப்படுகிறோம். இந்தப் போர் எங்களை விட்டுவைக்க வேண்டும் என நாங்கள் பிரார்த்திக்கிறோம்," என்று பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் கூறினார்.
உக்ரேனையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க தனது படைகள் ஆன அனைத்தையும் செய்யும் என்று அந்நாட்டு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
இதற்கிடையே, ரஷ்யப் படைகள் உக்ரேனுக்குள் படையெடுத்ததைத் தொடர்ந்து, தலைநகர் கீவில் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.
பாதுகாப்பான பகுதிகளுக்கு ஒரே நேரத்தில் ஏராளமானோர் புறப்பட்டதால், பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உக்ரேனியர்களை அனுமதிக்கும்
மத்திய ஐரோப்பிய நாடுகள்
இதற்கிடையே, ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரேனைவிட்டு வெளியேறுவோரைத் தங்கள் நாடுகளுக்குள் அனுமதிக்க மத்திய ஐரோப்பிய நாடுகள் தயாராகி வருகின்றன.
அண்டை நாடுகளான போலந்தும் ஹங்கேரியும் அந்த நாடுகளில் அடங்கும். ரஷ்யாவுக்கு எதிராக ஆகக் கடுமையான தடைகளை விதிக்க போலந்து உறுதிபூண்டுள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் "கண்மூடித்தனமானது" என்று செக் குடியரசு சாடியது.
போர்த் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தான் எடுக்கப்போவதாக நேட்டோ அமைப்பு நேற்று கூறியது. அவற்றில், 100க்கும் மேற்பட்ட போர் விமானங்களைத் தயார்நிலையில் வைப்பதும் கிழக்கு உக்ரேனில் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் அடங்கும்.
"எங்களது கண்டத்தில் நிம்மதி குலைந்துவிட்டது. வரலாற்றைத் திருத்தி எழுத ரஷ்யா அதன் படைகளைப் பயன்படுத்துகிறது. உக்ரேன் சுதந்திரப் பாதையை அமைத்துக்கொள்வதை அந்நாடு எதிர்க்கிறது," என்றார் நேட்டோ பொதுச் செயலாளர் ஜென் ஸ்டோல்டர்ன்பர்க்.

