ஜோகூர் பாரு: ஜோகூர் தேர்தலில் மலேசியாவின் பிரதான, புதிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் களமிறங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்
தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்து வேட்பாளர்கள் வரை போட்டியிட்டு பன்முனைப் போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வேட்புமனு தாக்கல் தினம். வாக்காளர்களை ஈர்க்கும் நோக்குடன் கூடுதல் இளம் நிபுணர்களை வேட்பாளர்களாக
கட்சிகள் முன்னிறுத்தும் என்று நம்பப்படுகிறது.
ஆட்சிக்கு வந்தால் ஜோகூர் மாநிலத்தவர்களுக்குத் தங்களால் பல நல்ல வாய்ப்புகளை உருவாக்கி வழங்க முடியும் என்று அனைத்து கட்சிகளும் கூறி வருகின்றன.
அடுத்த மாதம் 12ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வாக்
காளர் குறைந்தபட்ச வயது முதல்முறையாக 21லிருந்து 18க்குக் குறைக்கப்பட்டுள்ளது.
வாக்களிக்க தகுதி பெறும் அனைத்து ஜோகூர் மாநிலத்தவர்களின் பெயர்களும் ஏற்கெனவே பதிவேட்டில் இருக்கும் என்றும் அவர்கள் புதிதாகப் பதிவு செய்யத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இளையர்களை மையமாகக் கொண்டுள்ள மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி முதன்முதலாகத் தேர்தலில் போட்டியிடுகிறது. இக்கட்சியின் தலைவரான 29 வயது திரு சையது சாதிக் அப்துல் ரஹ்மான், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவின் இளையர், விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.
மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் தலைமையின்கீழ் செயல்படும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் 40 வயதுக்கும் குறைவானவர்கள்.
முன்னாள் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மதின் பெஜுவான் தானா ஆயர் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களில் ஏறத்தாழ 60 விழுக்காட்டினர் 50 வயதுக்கும் குறைவானர்கள்.
தனது வேட்பாளர்களில் 80 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் 55 வயதுக்கும் குறைந்தவர்கள் என்றும் அவர்கள் அனை
வரும் பட்டதாரிகள் என்றும் அம்னோ தலைமையின்கீழ் செயல்படும் தேசிய முன்னணிக்
கூட்டணி தெரிவித்துள்ளது.
"நாங்கள் முன்னிறுத்தும் இளையர்கள் ஜோகூர் மக்களுக்குத் துடிப்புடன் சேவையாற்றுவர் என நம்புகிறோம்," என்று தமது கூட்டணியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தபோது கூறினார் தேசிய முன்னணிக் கூட்டணியின் தலைவர் திரு ஸாஹிட் ஹமிடி.
ஏறத்தாழ 2.6 மில்லியன் ஜோகூர் மாநிலத்தவர்கள் வாக்களிக்க இருப்பதாக திரு சையது சாதிக் தெரிவித்தார். அவர்களில் நான்கில் ஒரு பங்கினர் முதல்முறை வாக்களிக்கும் இளையர்கள் என்றார் அவர்.
திரு சையது சாதிக்கின் மலேசிய ஐக்கிய ஜனநாயக் கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் 40 வயதுக்கும் குறைவானவர்கள்.
"40 வயதுக்கும் குறைவான ஜோகூர் மாநிலத்தவர்கள் தங்களுக்குக் கூடுதல் வேலை வாய்ப்பு களும் வர்த்தக வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர்," என்று ஜனநாயகச் செயல் கட்சியின் ஜோகூர் மாநிலத் தலைவர் லியூ சின் டோங் தெரிவித்தார். பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளரான திரு லியூ பெர்லிங் தொகுதி யில் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலின் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை ஜோகூர் மாநிலத் தேர்தல் ஒரளவுக்குக் காட்டிவிடும் என்று நம்பப்படுகிறது. 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் ஜோகூரைக் கைப்பற்றியது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவியதை அடுத்து, அம்மாநிலம் மீண்டும் அம்னோ வசம் சென்றது.

