ரஷ்ய தாக்குதலிலிருந்து தப்பிக்க உக்ரேன் மக்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர்.
போர் காரணத்தால் அந்நாட்டின் ஆகாயவழி போக்குவரத்துக்கு மூடப்பட்டுவிட்டது. இந்நிலையில் மக்கள் தரைவழி கார்களிலும் பேருந்துகளிலும் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயல்கிறார்கள்.ஆனால் முக்கிய சாலைப் பகுதிகளில் நெடும் போக்குவரத்து நெரிசலுக்கு அவர்கள் உள்ளாகிறார்கள்.
உக்ரேனை ரஷ்யப் படைகள் தாக்கத் தொடங்கியதிலிருந்து, 48 மணி நேரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரேனிய மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக ஐக்கிய நாட்டு அகதிகள் அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
பல நூறாயிரம் பேர் பேர் பக்கத்து நாடுகளுக்குச் செல்வதற்காக எல்லைகளை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாகவும் ஐக்கிய நாட்டு அமைப்பு கூறியது.
உக்ரேன் ஆண்கள் நாட்டைவிட்டு வெளியாவதைத் தடை செய்துள்ளதால் பெண்களும் சிறுவர்களும் மட்டுமே வெளியேறி வருகின்றனர். அன்புக்குரியவர்களிடம் கண்ணீர் சிந்தி பிரியாவிடை கொடுக்கும் காட்சிகள் உக்ரேன் எங்கும் நிகழ்ந்து வருகின்றன. ரயில் டிக்கெட்டுகளை வாங்கவும் தானியங்கி வங்கி இயந்திரத்திலிருந்து இருக்கும் பணத்தை எடுத்துக்கொள்ளவும் உக்ரேனில் மக்ள் நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர்.
ஏற்கெனவே, உக்ரேனில் சுமார் 100,000 பேர் தங்கள் வீடுகளை இழந்து வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக அது வியாழன் அன்று கூறியிருந்தது. ஐந்து மில்லியன் பேர் வரை அகதிகளாக மற்ற நாடுகளுக்குச் செல்லக்கூடும் என்றும் அது கூறியிருந்தது. போலந்து, மொல்டோவோ, ஆகிய நாடுகளுக்குப் பெரும்பாலானவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

