உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்து வரும் தாக்குதலை எதிர்த்து தோக்கியோ, சிட்னி, தைப்பே, ரோம், பியூனஸ் ஐரஸ், லிமா, ஜெனீவா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பல்லாயிரம் பேர் நேற்றும் பேரணிகள் நடத்தினர்.
நீலமும் மஞ்சளும் கொண்ட உக்ரேனின் தேசிய கொடியை ஏந்திக்கொண்டும் சிட்னியில் உக்ரேன் மேலோங்கும் என்று குரல் எழுப்பிக்கொண்டும் பலநூறு பேர் கொட்டும் மழையில் சாலைகளில் ஊர்வலமாகச் சென்றனர்.
தோக்கியோவில் நடைபெற்ற பேரணிகளில் ஐக்கிய நாட்டு அமைப்பு பாதுகாப்பு மன்றத்திலிருந்து ரஷ்யா நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ரஷ்யத் தாக்குதலை எதிர்த்து அண்மைய நாள்களில் லண்டன் முதல் நியூயார்க் வரை பல நகரங்களில் உலக மக்கள் பேரணிகள் நடத்தி வருகின்றனர்.
பல இடங்களில் ரஷ்ய அதிபர் புட்டினை ஹிட்லருடன் ஒப்பிட்டு மக்கள் பதாகைகளைத் தாங்கினர்.
தங்கள் நாட்டு அரசாங்கங்கள் ரஷ்யாவுக்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.
சிட்னியைத் தவிர கேன்பரா விலும் ரஷ்ய தூதரகத்துக்கு வெளியே சிலர் கூடி ரஷ்யாவுக்கு எதிராக கூச்சலிட்டனர்.

