இலங்கையில் இருக்கும் 4,000 உக்ரேனிய சுற்றுப்பயணிகளின் விசாவை நீட்டிப்பது குறித்து இலங்கை அரசு ஆலோசித்து வருவதாக ஞாயிற்றுகிழமை (பிப்ரவரி 27) அந்நாட்டுப் பயணத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்கா தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமைமுதல் உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவருவதை அடுத்து, தங்கள் விசாவை நீட்டிக்குமாறு இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும் ரஷ்யத் தூதரகத்திற்கு வெளியே பல உக்ரேனிய சுற்றுப்பயணிகள் போராட்டம் நடத்தினார்கள்.
தங்கள் நாட்டிற்குள் ரஷ்யப் படையினர் நுழைவதற்கு சரியாக 24 மணி நேரத்திற்கு முன் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்தார்கள் ஜியோர்ஜி மற்றும் நத்தாலியா தம்பதியர். தற்போது அவர்கள் பிரபல சுற்றுலாத் தலமான கால் நகரில் இருக்கின்றனர்.
மார்ச் 4ஆம் தேதி உக்ரேனுக்குத் திரும்புவதற்கான விமானப் பயணச்சீட்டுகளை வைத்திருந்தாலும், இலங்கை பயணத்தை நீட்டித்துக்கொள்ள இத்தம்பதியர் விரும்புகின்றனர்.
உக்ரேன்மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து குறைந்தது 240 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு வருகைபுரியும் சுற்றுப்பயணிகளில் பெரும்பாலானோர் உக்ரேனிலிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் வருபவர்களாக இருக்கின்றனர்.
இலங்கை செல்லும் சுற்றுப்பயணிகளில் 16 விழுக்காட்டினர் ரஷ்யர்கள் என்றும் 10 விழுக்காட்டினர் உக்ரேனியர்கள் என்றும் இலங்கையின் வெளிநாட்டுச் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பாஜ் தெரிவித்தார். இது, கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன் ஜனவரி 2019ஆம் ஆண்டில் இருந்த விகிதத்தைவிட சற்று அதிகமானதாகும்.

