ஒன்பதாவது முறையாக லீக் கிண்ணத்தை வென்றது லிவர்பூல்
லண்டன்: லீக் கிண்ணத்தை வெல்வதற்காக செல்சி, லிவர்பூல் குழுக்கள் மோதிய ஆட்டத்தில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் குறைவில்லை. வெம்பிளி அரங்கில் நடந்த இப்போட்டியில் இக்குழுக்களின் பல கோல் முயற்சிகள் நிராகரிக்கப்பட்ட பிறகு, ஆட்டம் 0-0 என்ற கோல்கணக்கில் முடிந்தது. எனவே வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி கோல் முறை பின்பற்றப்பட்டது.
பெனால்டி முறையின்போது 11வது வீரராக வந்த லிவர்பூலின் கோல்காப்பாளர் கெல்லர், செல்சி கோல்காப்பாளர் கெப்பாவை ஏமாற்றி பந்தை வலைக்குள் தள்ளினார். அதேசமயம், செல்சியின் 11வது வீரராக வந்த கெப்பா உதைத்த பந்து கோல் கம்பத்தைத் தாண்டி வெளியே சென்றுவிட்டது. இதையடுத்து, 11-10 என்ற கோல்கணக்கில் பெனால்டி ஷுட்அவுட்டில் லீக் கிண்ணத்தை வென்றது லிவர்பூல்.
அலிசானுக்குப் பதிலாக கெல்லரைக் களமிறக்கிய லிவர்பூல் நிர்வாகி கிளோப்பிற்கு நல்ல பலன் கிடைத்தது. அதேசமயம், ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் மென்டிக்குப் பதிலாக, பெனால்டி வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடுபவர் எனப் பெயர் எடுத்திருந்த கெப்பாவைக் களமிறக்கிய செல்சி நிர்வாகிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
2012ஆம் ஆண்டிற்குப் பிறகு லிவர்பூல் மீண்டும் லீக் கிண்ணத்தை வென்றுள்ளது. இக்கிண்ணத்தை அக்குழு ஒன்பதாவது முறையாக வென்றது.
உலகின் இரண்டாவது சிறந்த வீரர் என்று கெல்லரைப் பாராட்டிய லிவர்பூல் நிர்வாகி கிளோப், "செல்சி மிகவும் வலிமையான குழு. நாங்கள் ஒருவருக்கொருவர் ஈடுகொடுத்து விளையாடினோம். அதிர்ஷ்டமும் வேண்டும்," என்று சொன்னார்.
நான்காவது இடத்தை நோக்கிச் செல்கிறது வெஸ்ட்ஹேம்
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டப் போட்டியில் உல்வ்ஸ் குழுவை 1-0 என்ற கோல்கணக்கில் வென்றது வெஸ்ட்ஹேம். இதன் மூலம் இபிஎல் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் ஒன்றைப் பிடிப்பதற்கான தனது முயற்சியை உயிர்ப்புடன் வைத்துள்ளது வெஸ்ட்ஹேம். 59வது நிமிடத்தில் தாமஸ் சூசெக் வலைக்குள் தள்ளிய பந்துதான் இந்த ஆட்டத்தில் விழுந்த ஒரே கோலாகும். இதையடுத்து கோல்வித்தியாசத்தின் அடிப்படையில் ஆர்சனலைப் பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது வெஸ்ட்ஹேம். அதுமட்டுமல்லாமல், நான்காவது இடத்தில் உள்ள மேன்யூவைவிட வெஸ்ட்ஹேம் இரண்டு புள்ளிகள் மட்டுமே குறைவாக எடுத்துள்ளது.

